Saturday, July 5, 2008

இரு கவிதைகள்



சிலாகிக்க எதுவுமற்ற வாழ்வு

1
இளமையின் துடிப்பில் கழிந்த நாட்கள் அவை.
எல்லாமே சாதாரணமாகத் தெரிந்தது.
வெட்டுதல்வீழ்த்துதல், எல்லாமே
பின்னர் எல்லாமே புரிந்தது
காலம் மெல்ல மெல்ல நகர்ந்த போது.
வெட்டிப் பேச்சைத் தவிர எதுமே இலகுவானதல்லவென்று

2
குன்றும் குழியுமாக கிடக்கும்
அந்த தார் வீதியில்
எத்தனை நாட்கள் நடந்திருப்பேன்
எந்த கனவுகளுமற்று.
வாய்கடுக்க கதைத்து அலுத்த, அந்த நாட்களை
இப்போது நினைக்கக் கூட முடிவதில்லை
பின்வீட்டு தம்பியன், பக்கத்து வீட்டு ஜியாப்தீன், குட்டி
எல்லோருமாய் கூடி அளவளாவிய நாட்கள்தான் எத்தனை.

3
எல்லாமும் மாறிவிட்டது
எனது கிராமம் மட்டுமல்ல நானும்தான்
வெறும் ஞாபகங்களாக மட்டுமே கிடக்கும்
அந்த நினைவுகள்,
ஒரு மழை பெய்யும் போதும்
ஏதோவொரு இனம்புரியா புத்துணர்ச்சி
என்னை நனைக்கும் போதும்
மெல்லிதாக உரசித்தான் செல்கின்றன.

4
சதா சமரசங்களுடன் கழியும் வாழ்வு
கொள்கையே வாழ்வாக வாய்க்காதா? என்ற ஏக்கம்
இவற்றுக்கு மத்தியில் சிலாகித்துச் சொல்ல
என்னதான் இருக்கிறது வாழ்வில்.


உனது இரத்தத்தின் நிறம் என்ன

1
எல்லாமும் கேட்டாகிவிட்டது
சாதிகள் இல்லையடி பாப்பா
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
சாதித் தமிழன் ஒரு பாதித் தமிழன்
சமத்துவ பூமி கான்போம்
மார்க்சியம் நம்மை விடுவிக்கும்
தேசியம் எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கும்
எல்லாமும் கேட்டாகிவிட்டது.

2
இப்பொழுதும் திருமணம் என்றவுடன்
எழும் முதல் கேள்வி.
அவங்கள் என்ன ஆக்களாம்
எத்தனை மார்க்ஸ் வந்தென்ன
எத்தனை பெரியார் வந்தென்ன
அவர்களால் என்ன செய்ய முடியும்
நாம் இரத்தத்தின் நிறம் தெரியாவர்களாக இருக்கும்போது.

3
ஆரியன், வெள்ளாளன், பறையன், பள்ளன், நளவன்
இன்னும் எத்தனையோ சொல்வோம்.
எல்லா தத்துவங்களும் தோற்றுப் போன
இடத்திலிருந்து ஒன்றை கோட்போம்.
இதில் உங்கள் இரத்தத்தின் நிறம் சிகப்பல்ல
என்பவர்கள்முன்னுக்கு வாருங்கள்.
நமக்கானதொரு புதிய தத்துவம் காத்துக் கிடக்கின்றது.

Sunday, June 29, 2008

காணாமல் போதல்



அந்த சாலை வழியாகத்தான்
அவன் சென்றதாகச் சொன்னார்கள்.
அவன் ஏன் அந்த வழியாகச் செல்ல வேண்டும்.

அவன் தன் அலுவலகத்தலிருந்து
வீடு திருப்பிக் கொண்டிருந்திருக்கலாம்
தன் பிள்ளைகளை பவுத்திரமாக பாடசாலையில் விட்டுவிட்டு
வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கலாம்.
நோய்வாய்ப்பட்டு கிடக்கும் தனது தாய்க்கு
மருந்து வாங்கப் போயிருக்கலாம்
தன் சிறு குழந்தையின் அழுகை அடக்க
ஒரு வலூன் வாங்க போயிருக்கலாம்
பிரசவ வலியால் அவதிப்படும்தன் மனைவியின் நோக்கு
குழுசை வாங்கப் போயிருக்கலாம்
தன் நன்பனை பார்க்க போயிருக்கலாம்
அருகில் இருக்கும் நூலகத்திற்கு போயிருக்கலாம்
காலார நடந்திருக்கலாம்

இப்படி எத்தனையோ இருக்கிறது
அவன் அந்த சாலை வழிபோக
இதில் எது காரணமாக இருக்கலாம்
அவன் கானாமல் போனதற்கு.

‘’’

Saturday, June 28, 2008

நான் எல்லாமுமாகி தொடரும் விசாரனைகள்



1

‘சே’ சொன்னார்
ஒரு புரட்சிகாரனின் தகுதிகள்
வலிய கால்கள்
எளிய சுமை
பசித்த வயிறு
என்னிடமோ மூன்றும் இருக்கின்றன
நான் என்ன புரட்சிக்காரனா, பாட்டாளியா, பிச்சைக்காரனா?
எது நான்?
சம்பூரிலிருந்தும்,
காசா பள்ளத்தாக்கிலிருந்தும்,
துரத்தியடிக்கப்பட்டவர்களின் விசாரனையிது.
எனது தெரிவோ வன்முறை அரசியலாக இருக்கிறது
சேயின் குரல் ஒரு அசரீரியாக ஒலிப்பதை உள்வாங்கிக் கொள்கின்றேன்.

2

பல எண்ணங்களோடு அந்த வீதி வழியாக சென்று கொண்டிருந்தேன்,
சாத்திரம் பார்க்கும் இரு பெண்கள்
ஒரு பெண் தாயாகவும் மற்றையவள் மகளாகவும் இருக்க வேண்டும்
‘உங்களுக்கு ஒரு கண்டம் இருக்குதுசார்’
நிறுத்துகிறது ஒரு குரல்.
மகள் அழகாக இருந்தாள்.
அவளுக்கொரு அப்பா இருப்பதாவது தெரியுமோ என்னவோ.
எனது சின்ன வயசில் இவர்களை அடிக்கடி சந்தித்திருக்கிறேன்
வீடுவீடாக சென்று சாத்திரம் பார்ப்பார்கள்.
அப்பொழுது இப்படியொன்றை கேள்விப்பட்டிருக்கின்றேன்
இவர்களின் அழகான பெண்களை நல்லா குளிப்பாட்டிவிட்டு
பெரிய கடை முதலாளிகள் வைத்திருப்பார்களாம்,
அந்த நாய்கள் செய்தாலும் செய்யும்.
நான் எங்கு கொண்டுபோய் குளிப்பாட்டுவது, சரி.
கிறிஸ்தவம் இவர்களுக்கு தனது சாயத்தை பூசியும்
ஒரு மசிரும் நிகழவில்லை.
கிடைத்தவரைக்கும் கிறிஸ்தவ பரப்பிகளுக்கு லாபம்தான்

3

பெண் விடுதலைக்காக ஆண்கள் என்ன செய்யலாம்
எனக்குள் கிடக்கும் நீண்ட நாள் கேள்வியிது.
இப்பொழு என்னை நான் சொல்லியாக வேண்டும்.
எனக்குள் ஏதோவொரு சலனத்தை ஏற்படுத்தக்கூடியதொரு
பெண்ணை பார்த்ததும்,
நான் என்ன நினைக்கிறேன்?
நீங்கள் அதை தெரிந்துகொள்ள வேண்டும்.
எனது பார்வையோ அவள் கழுத்துக்கு கீழும் பிறகு காலிலும் பதிகிறது
எல்லாவற்றையும் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிடாதா
என்ற ஏக்கம் வேறு.
எனக்குள் அமுங்கிக் கிடந்து வெளிப்படும் ஆண்மேலாதிக்கத்தின் அசிங்கங்கள் இவை.
எனக்கு போலிகளில் நம்பிக்கையில்லை.
எத்தனை பேருக்கு உங்களைச் சொல்லும் துணிவிருக்கிறது.
பெண்விடுலைக்காக குரல் கொடுக்கும் ஆண் முற்போக்கு நன்பர்களே!கோட்பாட்டாளர்களுக்கு குண்டி சொறிவதை விட்டுவிட்டு
வெளியில் வாருங்கள்
முதலில் உங்களை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்,
என்பதைச் சொல்லுங்கள்.
பின்னர் தொடர்வோம் பெண்விடுதலைக்கான நமது போராட்டத்தை.

‘’’’

பிற்குறிப்பு இது கவிதையா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. எனது எண்ணங்களை இங்கு பதிவு செய்திருக்கின்றேன். அனைத்து கவிதைகளும் ஏதோவொரு வகையில் எண்ணங்களின் வெளிப்பாடுகள்தான். நீங்கள்; விரும்பினால் இதனை கவிதையென அழைக்கலாம். விரும்பாதவர்கள் மசிர் என்று அழைக்கலாம், நான் கோபப்படமாட்டேன். குண்டி, மசிர் போன்ற சொற்கள் இதில் இடம்பெற்றிருப்பதால் இது ஒரு பின்நவீனத்துவ கவிதையெனவும் சிலர் சிலாகிக்கக் கூடும் ஏதாவது ஒன்றைச் சொல்விட்டுப் போங்கள் இப்பொழுது நம்மத்தியில் எப்படியும் விமர்சிப்பதற்கான இடமுண்டு, அது தமிழ் பின்நவீனத்துவ பிதாமகர்கள் நமக்கு வழங்கியிருக்கும் கொடையாகும்.

Monday, June 23, 2008

அரிப்பை தாங்க முடியவில்லை அதனால் சொறிந்து கொள்கிறேன்.

1

இப்பொழுதெல்லாம் இணையத்திற்குள் நுழையத் தெரியாதவர்கள் பாடு அதோ கெதிதான் என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஆனாலும் இணையத்திற்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள உறவை பார்த்தால், அது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாக தெரிகின்றது. நாம் என்னதான் கோளமய உலகம் (புடழடியடளைந றழசடன ), உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், சாமாணிய மக்களின் வாழ்க்கை என்னவோ அப்படியேதான் இருக்கின்றது. உலகத்தின் சுருக்கம் சாதாரண ஏழை மக்களின் வாழ்க்கை எல்லையை விரிக்க வில்லை. மாறாக மேலும் சுருக்கி வருகிறது. இந்த நிலைமை பணம் படைத்தவர்கள் மேலும் பணக்காரர்களாக ஏழைகளோ மேலும் கடைக் கோடி நிலையை நோக்கி சரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த லட்சனத்தில் நாம் இணையத்திற்குள் புகுந்து கொள்வது எவ்வாறு எழுத்தின் நோக்கத்தை நிறைவு செய்ய உதவப் போகின்றது? எங்களுடைய ஆவேசமான சொற் கணைகள் எவ்வாறு விடுதலை வேண்டி நிற்கும் மக்களைச் சென்றடையப் போகிறது?

2

வலைப்பதிவொன்றை உருவாக்கிக் கொள்ள எத்தணித்தபோது இப்படியெல்லாம் கேள்விகள் எழுந்தன? நான் வலைப்பதிவில் எழுதி என்ன நடக்கப்போகின்றது எத்தனைபேரை அது சென்றடையப் போகின்றது? ஏனென்றால் நானோ சாதாரண மக்களை நோக்கி எழுதி வரும் ஒருவன். பல வருடங்களாக ஈழத் தமிழர் அரசியல் சார்ந்து உரையாடி வருகிறேன். எனது பிரதான ஈடுபாடு தமிழர் தேசியம், மற்றும் புதிய மார்க்சியம் என்பன ஆகும். இப்படிப்பட்ட நான் வ.பதிவிவு என்ற பெயரில் என்னை சுருக்கிக் கொள்வது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்? சரி அவ்வப்போது எழுதித்தான் பார்ப்போமே! என்ன வந்துவிடப் போகின்றது. அரிப்பெடுத்தால் நாம் சொறிந்து கொள்வதில்லையா அப்படி இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும். இந்த பத்தியில் நான் எழுத எடுத்துக் கொண்ட விடயம் ‘ஈழத்தில் தலித்தியம்’ என்பதாகும்.


நான் சமீப காலமாக இந்த உரையாடலை அவதானித்து வருகின்றேன். அதிலும் குறிப்பாக இவ்வாறான வலைப்பதிவுகளில் இவற்றை அதிகம் பார்க்க முடிகின்றது. ஈழத் தமிழர் தேசியம் தலித்துக்களை புறிக்கணிக்கின்றது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் தலித்துக்களுக்கு விடுதலையைக் கொண்டு வரப்போவதில்லை என்றெல்லாம் பலர் கருத்துக்கள் என்ற பேரில் அவதிப்படுகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது நான் எனக்குள் சொல்லிக் கொள்வேன் அட மடப் பயல்களே ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் இன்னும் ஈழத் தமிழர்களுக்கே விடுதலையைக் கொண்டுவர வில்லை பின்னர் எங்கு தலித்துக்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போகிறது.


3

நன்பர்களே! ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம். அதன் இலக்கு சிங்கள மேலாதிக்கத்திலிருந்து ஈழத் தமிழர்களை விடுவிப்பது அதாவது தமிழர்களுக்கென்று ஒரு சுயாதீனமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதாகும். முதலில் அது நிகழ்ந்து முடியட்டும் பின்னர் அதில் இடம்பெற வேண்டிய அகநிலை மாற்றங்கள் குறித்து நாம் பேசலாம். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் நம்மில் பலருக்கு தலை எது கால் எது என்று விளங்குவதில்லை. தம்மை புத்திஜீவிகளாக காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரத்தில், இவர்கள் தலையை கால் என்பார்கள் காலை, தலை என்பார்கள். இவர்களது தேவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே ஒழிய பிரச்சனைகளை புறச் சூழல் நிலமைகளுக்கு ஏற்ப அலசி ஆராய்வதல்ல. எல்லோருக்கும் தாங்கள் தங்கிக் கொள்வதற்கு வசியான தரிப்பிடங்கள் தேவைப்படுகின்றன.


ஈழத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுகின்றனர், தமிழர் தேசியம் தலித்துக்களுக்கு விமோசனத்தைக் கொடுக்கப் போவதில்லை என்ற வாதங்களை சொல்லி வருபவர்களெல்லாம் ஒரு வகையான அடையாள விரும்பிகள்தான். இவர்களது கருத்துக்களில் ஒரு அடிப்படையான நேர்மை இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் தலித்தியம் என்பது வசதியாக கருதி ஒழிந்து கொள்வதற்கான ஒரு கூடாரமேயன்றி வேறொன்றுமில்லை. தங்களை எழுத்தாளர்களாகவும், புலிகளை விட நாங்களே முற்போக்காளர்கள் என்று பீற்றிக் கொள்வதற்கும் இவர்களுக்கு தலித்தியம் தேவைப்படுகிறது. இதற்காக தங்களது கடந்த கால அனுபவங்களை சிரமப்பட்டு நினைவுக் குறிப்புக்களாக எழுதி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைகளை முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில் நினைவு கொள்கின்றனர். உண்மையில் இவர்களது பிரச்சனை தங்களது அனுபவங்களை சொல்லுவதன் மூலம் தங்களை இன்றைய தலைமுறைக்குள்ளும் அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இவர்களிடம் இருப்பது வெறுமனே அடையாள விருப்பு நிலை மட்டுமே. ஆழமாக பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளே இவர்கள்தான் ஏனென்றால் இவர்கள் கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்பவர்களின் பெயர் முற்போக்காளர்களோ அல்லது விடுதலை விரும்பிகளோ அல்ல. அவர்கள் பழமையின் ரசிகர்கள். இன்று ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனை அன்றுபோல் அப்படியேதான் இருக்கின்றது என்பவர்களும், தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் ஏற்பட்ட உடைவுகளை சுட்டிக்காட்ட தயங்குபவர்களும் சாதி என்னும் அழிந்து போக வேண்டிய பழமையின் ரசிகர்களே அன்றி அதன் மறுப்பாளர்கள் அல்ல என்பதே எனது நிர்திடமான வாதம்.


4

அதற்காக நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது, தலித்தியம் என்று சொல்லப்படுவதையோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான பிரச்சனைகளையோ நான் மறுப்பதாக. ஈழத்தில் சாதியம் வலுவாக இருந்ததையும் இப்பொழுதும் திருமணம், சடங்கு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் அது உயிர்பெறுவதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அது முன்னைய இறுக்கத்துடன் இருக்கிறது என்று வாதிடுவது சுத்த பம்மாத்து என்பதுதான் எனது துனிபு. இப்படியான பம்மாத்துக்களின் தோற்றுவாயை பார்ப்போமானால். தமிழக தலித்திய ஆய்வுகளையும், அங்குள்ள சாதி அரசியல் அனுபவங்களையும் அருச்சுவடிகளாக கொண்டு ஈழத்து அரசியலுக்கு விளக்கம் சொல்ல முற்படும் பொழுதுதான் இந்த பிரச்சனை எழுகிறது. தமிழக தலித்திய அரசியல் என்பது எந்தவகையிலும் ஈழத்து அனுபவங்களுடன் பொருந்திப் போக முடியாது. அது வேறு இது வேறு.


ஆனால் அதனை வலிந்து பொருத்த சிலர் மேற்கொண்ட தந்திரோபாயம்தான் ஈழத்து எழுத்தாளர் டாணியலை தமிழக தலித்தியத்தின் முன்னோடி என்று அழைத்துக் கொண்டமையாகும். டாணியல் ஒருபோதும் தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று அழைத்துக் கொண்டவர் அல்லர். டாணியல் தன்னை இடதுசாரி என்றே அழைத்துக் கொண்டார். ஆனால் டாணியலின் பிரதான கருத்து நிலை யாழ்ப்பாண சாதிய மரபிற்கு எதிரானதாக இருந்தது. அன்றைய சூழலில் அது முற்றிலும் சரியானதுதான். இதற்கு டாணியல் சார்ந்திருந்த சீனசார்பு இடதுசாரி கட்சியின் தீண்டாமை ஒழிப்பு நிலைப்பாடும், டாணியலின் தனிப்பட்ட அனுபவங்களும் காரணங்களாக இருந்தன. அதற்காக அது எல்லா காலத்திற்கும் சரியாகத்தான் இருக்குமென்று வாதிடுவது அறிவுடமையன்று. ஆனாலும் டாணியலிடம் ஒரு அடிப்படை நேர்மை இருந்தது, டாணியல் தன்னையொரு தாழ்த்தப்பட்டவர் என்று பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டார் குறிப்பாக தன்னை வண்ணான் என்று பகிரங்கமாக குறிப்பிட்டார். இன்று தலித்தியம் பேசும் எத்தனை பேரிடம் அந்த நேர்மை இருக்கிறது. இன்று தலித்திய எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் எத்தனை பேரால் நான் ஒரு பறையன், நான் ஒரு பள்ளன், நான் ஒரு நளவன் என்று பகிரங்கமாக மேடைகளில் சொல்ல முடியும்? இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


இன்னும் பல விடயங்கள் பற்றியும் நான் தொடர்ந்து பேசுவேன். நமது உரையாடல் சூழலால் எனக்கு அரிப்பெடுக்கும் போதெல்லாம் நான் சொறிந்து கொள்ள தயங்க மாட்டேன்.
‘’’